Oct 1, 2011

யேடி கள்ளச்சி..

”ஏண்டீ.. இந்த பொண்ணுங்களாம்
பூக்கள்னாலே
மயங்கிடுவாங்களாமே
நிஜமா?”
“ம்ம்... ஆமா..”
“ஏன் அப்படி?”
”அது அப்படிதான்..”
“ம்ம்..சரி விடு.. இனிமேல்
நீ கோவபட்டா நானும்
பூ வாங்கி குடுத்து சமாளிக்கிறேன்..”
“ஹா..ஹா..
அப்படி எத்தன நாளைக்கு சாமாளிப்ப?”
“அட.. அப்போ உன்ன பூந்தோட்டம்..
இல்ல..இல்ல.. பூக்காட்டில்
வீடு கட்டி குடி வச்சிடுவேனே..”
“ம்ம்.. அப்படியா?
அதுக்கும் அசரலேன்னா
என்ன பண்ணுவ?”
“விடு..விடு.. அதுகெல்லாம்
ஐயா கிட்ட ஐடியா இருக்குடி..”
“என்னடா அது சொல்லுடா..”
“அதெல்லா சொல்ல முடியாதுடி..”
“ சொல்லலேன்னா எனக்கு
கெட்ட கோவம் வரும்டா..”
“ஹா..ஹா.. இந்த மாதிரி கோவப்படுற
பொண்ணுங்களை சமாளிக்கதானே
அந்த நான்கெழுத்து மந்திர சொல்லை
கண்டுபுடிச்சு வச்சிருக்கோம் பசங்க..
நீ வேணும்னா இப்பவே
கோபப்பட்டு பாரேன்..
அடுத்த நிமிடமே
ச்ச்சீய்..போடா..உதடு வலிக்கிறதென்பாய்.”
********************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Aug 10, 2011

குட்டி..

இழப்புகளின் வலி
அறியாத காலம்
அதன் போக்கில்
சென்று கொண்டிருக்கிறது.
உன் நினைவுகளை
கட்டி வைக்க பெரும்பாடு
படுகிறேன் நான்.
******************************
சொல்லாதே குயிலே
எந்த பாடலும் என்னோடு..
என் சோகம் சொல்லவே
நாதியற்று கிடக்கிறேன்.
******************************
உணர்வுகள் என்று
பார்த்தால் என்னிடம்
ஒன்றும் இல்லயடி குட்டி..
உன் நினைவுகளை தவிர.
***************************
ஒவ்வொரு நாளும்
பொய்யாய் கழிந்து
கொண்டிருக்கிறது..
இன்றேனும் எனை
தேடி வருவாய் என்ற
நம்பிக்கையோடு.
**************************
காலுடைந்த மயிலை
போலல்ல..
கனவுடைந்த நெஞ்சம்.
கண்ணீரிலும் உன்னைதான்
நினைத்துகொண்டிருக்கிறதடி குட்டி.
*****************************
கூந்தல் இளைப்பாறும்
பூக்கள் அறிந்திருக்குமா?
கருகிப்போகும்
காம்பின் வலிகள்.
********************************
நானும் கவிதையும்
நலமாய் வாழ்ந்திருக்கலாம்தான்.
நாளும் உன் நினைவற்று
போயிருந்தால்.
***************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jul 28, 2011

அன்பே.. அன்பே..

என்னதான்
துரத்தியடித்தாலும்

அவ்வப்போது

விழியோரமாய்

மழை ஈரமாய்

நனைய வைத்து விடுகிறது

உன் நினைவுகளாய்.

தனிமை.
------------------------------
மிக மிக அழகாக

அல்லது ஆழமாக

பிறந்திருந்தாலும்

சட்டென்று கசக்கி எறிய

தெரிந்திருக்கிறது

எல்லா பெண்களுக்கும்.

பூக்களையும்

பூக்களை போன்ற மனதையும்.
---------------------------------
உன் வீட்டு ஜன்னலோர

உன் தனிமையில்

கம்பியில் பட்டு

முகத்தில் தெறிக்கும்

மழை துளியின்

ஈரமாகவோ
அல்லது ஜன்னலோர

பேருந்து பயணத்தின்

பின்னோக்கி செல்லும்

நினைவுகளாகவோ

கவிதை சொல்லிக்கொண்டு

உன்னையே சுற்றிகொண்டிருக்கும்

என் ப்ரியங்கள்.

தூறலாய் பொழியும்

ஒரு மழை நாளில்

கண்ணில் சாரலாய்

வழியும் சபிக்கப்பட்ட

நிமிடங்களில்

இது போதுமென

ஏகாந்தமாய் சாய்ந்திருக்கும்

வேளைகளில்

அல்லது கண்மூடி

மனம் நிறைந்து

ரசித்துக்கொண்டிருக்கும்

ஒரு பாடலின் வரிகளில்

என ஏதோ ஒன்றில்

உன் ஞாபக சிதறல்களில்

மெல்ல தட்டுபடலாம்

என் ப்ரியங்கள்.

நிச்சயமாக அவ்வேளையில்

கண்ணில் நீராக அல்ல

உன் இதழில் புன்னகையாக

வாழும் என் ப்ரியங்கள்.

ப்ரியமுடன்

லோகநாதன்.

Jul 19, 2011

மனசறிந்த பூக்கள்..

பூக்களற்ற செடிகளை
தாங்கி நிற்கும் வேர்களாய்
ஆசைகளற்ற உன் நினைவுகளை
தாங்கி நிற்கும் இதயம்.
---------------------------------------
கவனிப்பாரற்று வேர்கள்
காய்ந்தே கிடந்தாலும்
சந்தோஷமாய் மலரும்
மனசறிந்த பூக்கள்.
----------------------------------
அன்பை கொல்லும் ஆயுதம்
உண்டோ என கேட்டேன்..
உள்ளதே என மெளனமாய்
சொல்லாமல் சொல்கிறாய்.
-----------------------------------
நிஜங்களாய் தேய்ந்து
நினைவுகளாய் வளர்ந்து
கண்ணீராய் கரைந்து
கொண்டிருக்கிறாய் என
தெரிய வாய்ப்புகள் இல்லைதான்.
இன்னமும் உன் நலம்
கேட்டுக்கொண்டே இருக்கும்
என் வீட்டு கண்ணாடிக்கும்..
என் தோட்டத்து பூக்களுக்கும்.
--------------------------------------
உன்னருகே இருக்கும்
நேரங்களில் ஒருபோதும்
மதித்ததே இல்லை என்றாலும்
காலம் எனக்கு மிகசிறந்த
பரிசுகளை செய்து கொடுத்திருக்கிறது.
உன் நினைவென்னும் பெயரில்.
----------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jun 6, 2011

உயிரே..

நீ புன்னகைத்தாலே போதுமடி
என் இதயம் உன் சொந்தமாகும்.
ஒரு வார்த்தை பேசினாலே போதுமடி
என் நாட்கள் உன் சொந்தமாகும்.
நீ இஷ்டப்பட்டு கேளடி என் குட்டி
என் மூச்சு காத்தும் உன் சொந்தம்.
********************************
தெரியுமாடி உனக்கு?
அம்மாவும் அப்பாவும் சேர்ந்து
பிள்ளைகளை கொஞ்சுவதை போல
உன் நினைவுகளும்
என் நினைவுகளும் சேர்ந்து
கொஞ்சிக்கொண்டிருக்கின்றன..
உனக்காய் பிறந்த என் பிரியங்களை.
**********************************
காதலிடம் சாபம் பெற்றேன்
உன்னில் வாழும் வரையில்
மோட்சம் இல்லையென..
குட்டி தேவதையென
வந்து சேர்ந்தாய் இனிக்க இனிக்க
கதைகள் பேசி.
புத்தம் புது மலராய்
மனதை திறந்து
அன்பை சொல்லி ஆசை வைக்க ..
தயங்கி நடித்து வெறுத்து
மறைத்து மறைத்து
புதைத்து வைத்தாய்.
அடைமழை கூட இங்கே
அனலாகி கொதிக்குதடி..
ஒரு நொடி கூட என்னில்
யுகமாகி வதைக்குதடி.
உணர்ந்திடும் நாளொன்று
வந்து சேரும் எப்படியேனும்
அன்று இருப்பாய்
எந்தன் வாசல் முன்பே.
உலர்ந்து போன என் சம்பல் கூட
உன் புன்னகையை
தாங்கி நிற்கும் அவ்வேளை.
****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

May 24, 2011

தீராதது காதல்


இந்த பாடல் எனக்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று.

ப்ரியமுடன்..
லோகநாதன்.

May 17, 2011

வார்த்தைகள்..

பொருளற்று பிறந்திருந்தாலும்
மிக பொறுமையாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
என் வெளியெங்கும்
தீராத ஏக்கங்களோடு..

மணிக்கணக்கில்
பேசிய பின்பும்
போகும்போது இன்னும்
ஏதோ மீதமிருப்பதை
போல தோன்றும்..
இப்போதும் தோன்றுகிறது..
நம் உறவுகள் முடிந்துவிட்டன
என தெரிந்தும்..
இன்னும் கொஞ்சம்
அழுத்தமாகஅல்லது ஆழமாக
பேசியிருக்கலாம்தான்..

கொஞ்சம் சண்டையாக
நிறைய்ய கவிதையாக
மாற தெரிந்ததற்கு
முட்களாக மாற
தெரிந்திருந்ததில்
வியப்பேதும் இல்லை..


எதற்கும் கவனமாய் இரு.
ஒரு வேளை உன்னிடத்திலும்
சுயங்கள் திருட முயற்சிக்கலாம்..
உனக்கும் எனக்குமாய்
பிறந்து தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள்.
***********************************

Apr 19, 2011

திமிரும் திமிர்.

அழகாக இருந்தாலே
திமிரும் கொஞ்சம் கூட இருக்கும் போல..
உன் திமிரும் திமிரின் திமிரை
பார்த்ததிலிருந்து திமிர் பிடித்து
அலைகிறது மனசு.
******************************

எந்த பகையும் இல்லாமலே
எதிரியாகி போகிறேன்
உன் ஆடைகளுக்கு..
கட்டியணைக்கும்போது
குய்யோ முய்யோவென
கூச்சலிட்டு
கன்னாபின்னாவென
சாபமிடுகின்றன என்னை.
**********************************

உன்னை பார்த்ததுமே
முத்தமிட துடிக்கும் உதடுகளையும்
கட்டியணைக்க துடிக்கும் கைகளையும்
முறைத்தே அடக்கிவிடுகிறாய்.
ஆனால் தாறுமாறாக வந்து விழும்
வார்த்தைகளை என்ன செய்வாய் என கேட்க
அவற்றைத்தானே பத்திரமாய்
எடுத்து வைத்துக்கொள்கிறேன்..
தனிமையின் இனிமையான
துணையல்லவா எனக்கது என்கிறாய்.
எல்லாம் சரிதான்..
முத்தங்களையும் மூச்சடைக்க
பெற்றுக்கொண்டால் குறைந்தா போய்விடுவாய்?
*****************************************

ஏதேச்சையாய் உன்புகைப்படத்தை
பார்த்த என் வீட்டு கிளி
உன் உதடுகளை கொத்திப்பார்த்து விட்டு
ஏன் இந்த கோவைப்பழம்
இனிக்கவில்லை என கேட்டு
நச்சரிக்கிறது.
அது புகைப்படமென்று எப்படி
புரிய வைப்பேன் அதற்கு?
*********************************

எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை
வம்பிழுப்பதே உனக்கு வேலையாக
போய்விட்டது.
இனிமேல் வம்பிழுத்துதான் பாரேன்
மூச்சுக்கு முந்நூறு முத்தங்கள்
வைக்கப்போகிறேன் நான்.
**********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Apr 16, 2011

மனசு..

காட்சிகள் வர்ணம் தொலைத்து விட்டன.
வார்த்தைகள் ஜீவன் இழந்து விட்டன.
நேரங்களின் சிறகு முறிந்து விட்டது.
இன்னும் உன்னை தேடி தேடி
அலைந்து கொண்டுதானிருக்கிறது
மனசு.
****************************

தீராத ஆசைகளையும்
கரையாத நேசங்ளையும்
புதைக்க தெரிந்தவன்
நல்ல மனிதனாகிறான்.
தெரியாதவன் பைத்தியமாகிறான்.
*******************************

காற்றின் திசையில்
பறக்கும் பட்டமாய்
மனசின் திசையில்
வாழ்க்கை.
விருப்பங்களற்று.
*********************************

கருவோடு சுமந்ததை போலல்ல..
தெருவோடு காண்பதெல்லாம்
சில புன்னகைகளும்..
கொஞ்சமாய் நலம் விசாரிப்புகளும்
போதுமல்லவா?.
*****************************

சிரித்தால் சிரிக்கிறது
முறைத்தால் முறைக்கிறது
அழுதால் அழுகிறது.
உன் போலில்லை
என் வீட்டு கண்ணாடி.
*****************************


Apr 5, 2011

பல்லாங்குழி..

கனவுகள் அவரவர்
சொந்த உரிமையாம்..
அவற்றைகூட திருடி கொள்ள
உன்னால் மட்டும்தான் முடிகிறதடி.
************************

”நல்லா சாப்ட்டு சீக்கிரம்
குண்டாகுனா கேக்கவே மாட்டியா நீ?”
“ஏன்.. நா குண்டானா உனக்கென்ன?”
“ஹி..ஹி.. குண்டானா இடுப்புல
ஏதோ மடிப்பு விழுமாம்ல..
அங்கதான் வீடு கட்டி
குடித்தனம் பண்ணுவேன்னு
அடம் புடிக்குது மனசு..”
“அய்..அஸ்கு.. புஸ்கு.. ஆசைய பாரு”
பழிப்பு காட்டியதில்
பல்லாங்குழி ஆடுதடி அதே மனசு.
***************************

இனிமேல் சேலையெல்லாம்
கட்டவே கட்டாதே..
உன் எல்லா அழகையும்
தானே திருடி வைத்து கொள்(ல்)கிறது
கர்வம் பிடித்த சேலை.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 31, 2011

தனிமை நிழல்..

தனிமையின் நிழல்
தாகம் தீர்க்கிறது..
உன் நினைவுகளால்
காய்ந்த இதயத்தை
உன் நினைவுகளை கொண்டே.
*********************************

எந்த பூக்களுமே
இயல்புகள் அற்று அறியாமல்
பூப்பதில்லை..
ஆசைகளை தவிர.
***************************

கொன்றாலும் அழியாதவை
உன் நினைவுகள் என்றேன்.
மெல்ல மெல்ல கொன்று
பரிசோதித்து
பார்த்துகொண்டிருக்கின்றன
உன் நினைவுகளே.
**********************************

ஏமாறுவது நம் தவறுமல்ல..
ஏமாற்றுவது அவர்கள் தவறுமல்ல..
யாசகனாய் இருத்தல் தவறென்கிறேன்.
****************************

எல்லாம் அறிந்தும்
சிதறடிக்கிறாய் மனதை.
தட்டுத்தடுமாறி கண்டெடுத்து
ஒன்றென சேர்க்க
மீண்டும் உன்னிடமே வந்து
காதல் என்கிறது.
*******************************


கரைந்த நேரங்களை
கண்களில் தேக்கி
நிகழ்காலத்தை
தொலைத்துகொண்டிருக்கும்
இயல்புகள் இழந்த மனசு.
*************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 26, 2011

எங்கிருக்கிறாய் நீ..


காய்ந்து போன முற்றத்தை
ஈரமாய் அணைத்துக்கொள்ளும்
நிலவின் ஒளியாய்..
உன் நினைவுகள்.
*****************************


ஏதும் அறியாதவையாய்
எப்போதும் போல கேட்கின்றன
என் தோட்டத்து பூக்கள்..
எங்கே உன் அன்பென்று?
தவமின்றி கிடைத்த
வரங்கள் யாவும்
நிலைப்பதில்லையென்று
சொன்னால் புரியுமா அவைகளுக்கு.
***********************************


கவிதைகள் விற்பனைக்கு..
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோ
அசரடிக்கும் கவிதைகளிலோ
வாழ்வதில்லை காதல்.
**********************************


மனதறிந்து பேசுபவரிடம்கூட
மனதோடு தோன்றுவதை
பேசிவிடாதே..
மிகசிலரால் மட்டுமே
புரிந்துகொள்ள முடிகிறது.
பலரால் பிரிந்து செல்லதான்
முடிகிறது மிக எளிதாக.
*********************************


தேசம் இழந்த அகதியாய்
அலைந்து கொண்டிருக்கிறது
மனசு..
எங்கிருக்கிறாய் நீ.
*********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 23, 2011

கருவறுந்த இதயங்கள்

மறுக்கப்பட்ட போதும்
மறக்க நினைப்பதில்லை ஒருபோதும்..
கருவறுந்த இதயங்கள்.
****************************

வழியில்லா இடத்தில்
வருகையை எதிர்பார்ப்பது போல
மனசில்லா இடத்தில்
மயக்கங்களை எதிர்பார்த்தவனாகினேன்..
ஏற்றுகொள்ள மறுக்கும் மனசு
ஊமையாய் அழுது அடம்பிடிக்கிறது.
பாரங்கள் கரையாது என தெரிந்தும்.
***********************************

சமயங்களில் இறப்புகள் கூட
இயல்பாய் இருக்கின்றன..
இழப்புகள் இருப்பதில்லை ஒருபோதும்..
காணும் காட்சிகளும்
கிடைக்கும் தனிமைகளும்
கரையும் இரவுகளும்
விடியும் பொழுதுகளும்
முட்களென தாங்கி நிற்கின்றன.
உன் நினைவுகளை.
********************************

பறிக்கப்படுவதே சோகம் எனும்போது
அந்த பூக்கள் பூஜைக்கு போனாலென்ன..
கல்லறைக்கு போனாலென்ன..
உணர்விழந்த வாழ்க்கையும்
பறிக்கப்படும் பூக்களும்
ஒன்றென்றுதான் தோன்றுகிறது.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 16, 2011

அழகு பிசாசு.

நீ வரும்வரை
தடுமாறிக்கொண்டிருக்கும் என் நேரங்கள்..
நீ வந்தவுடன் இறக்கை கட்டி
பறக்கின்றன..
அப்படி என்னதான் மந்திரம் வைத்திருக்கிறாய்?
**************************************
அழகென்ற சொல்லுக்கு
எதிலெதிலோ விளக்கம் கிடைத்தது.
பேரழகு என்பதோ உன்னை
பார்த்த பின்புதான் விளங்கியது.
அழகு பிசாசே..
உன்னை ரசிக்க இன்னும் எத்தனை
காலங்கள் வேண்டுமானாலும்
வரமாய் வாங்கலாமடி.
**************************************
சாலையோரம் என் கை பிடித்து
நடக்கையில் வேறு எதையும் நீ
தொடுவதே இல்லையாம்.
உதிரும் பூக்கள் என்னிடம்
சண்டைக்கு வருகின்றன.
தெரியுமா அவைகளுக்கு..
உன் கைபிடித்து நடக்கவே
என் நேரங்களை நான் பார்த்து பார்த்து
செய்துகொள்வது.
***************************************
எப்போதுமில்லாத அதிசயமாய் நீ
முத்தப்பந்தயத்திற்கு
ஒப்புக்கொள்ளும்போதே
நான் யோசித்திருக்க வேண்டும்..
அம்மாடீ.. கேட்பவர்களுக்கு
இனி என்ன பதில் சொல்ல நான்?
************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 5, 2011

அட..கிராதகிகளா..

பெரும்பாலும் பெண்கள் அழுதால்
பேய் மாதிரி இருக்குமாம்..
நீயும் அப்படிதான் இருப்பாய் என
நினைத்திருந்தேன்.
முதன்முதலாய் எனக்காய் நீ
அழுததை பார்க்கும்வரை.
*****************************
“சுச்சூ... அம்முகுட்டி..”
நீ பக்கத்து வீட்டு குழந்தையை
கொஞ்சி கொண்டிருக்கும்போது
“குழந்தையோடு என்ன விளையாட்டு..
வா சாப்பிடுவாய்” என அழைத்த
உன் பாட்டிக்கு தெரியுமா?
இனம் இனத்தோடுதான் சேருமென்று.
********************************
“ஹாய்..”
“ஹாய்..”
“இப்போதான் வந்தியா?”
“ம்ம்.. நீ ஏன் லேட்டு?”
“கொஞ்சம் வேலை.. அதான் லேட்டு”
“இல்ல.. என்னமோ இருக்கு”
“அதான் சொல்றமுல்ல.. வேலைனு..”
“நா நம்ப மாட்டேன்.. நீ சொல்லு”
”என்ன சொல்ல?”
“ஏன் லேட்டுனு சொல்லு”
“அதான் வந்துடேன்ல.. விடு அதை..”
“அப்டீல்லாம் விட முடியாது..
சொல்லிதான் ஆகணும்..”
“நீ இப்டீல்லாம் சொன்னா கேக்க மாட்ட..
இப்போ சொல்றேன் பாரு..”
“சொல்லு..சொல்ல்ல்ல்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....”
உன் கண்ணாடி வளையல்கள்
வெட்கபட்டு கூச்சலிட..
நம் காதல் மெல்லமாய் இறக்கை கட்டியது.
எல்லாம் முடிந்து கடைசியில்
பெருமூச்சுடன் முனகினாய்..
”இத மொதல்லயே பண்ணிருக்கலாம்..
தேவையில்லாம வம்பு சண்டை போட்டு..
ஹம்ம்ம்.. சரியான டியூப்லைட்டு..”
அட..கிராதகிகளா...
***********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 22, 2011

சுகம்தாங்கி கற்கள்.

எப்போது முத்தம் கேட்டாலும்
முறைத்துக்கொண்டே
திரும்பி நின்று கொ(ல்)ள்கிறாயே..
தெரியுமாடி உனக்கு..
பின்னங்கழுத்தில் முத்தமிட கூடாதென்று
காதலில் எந்த விதியும் இல்லையென.
***************************************
எப்போதும் சுமைகளையே
தாங்கும் சுமைதாங்கி கற்கள்
நீ அமரும்போது மட்டும்
சுகம்தாங்கி கற்களாகின்றன.
*************************************
நிலவை காட்டினால்தான்
சாப்பிடுவேன் என அடம்பிடித்த
குழந்தை எதிரில் வந்த
உன்னை பார்த்ததும்
சிரித்துக்கொண்டே சாப்பிட
தொடங்குகிறது.
***************************************
வெறுமனே என்னை பார்த்து
புன்னகைத்து சென்றால்
துள்ளி குதித்து கும்மாளமிடுகிறது
இந்த மனசு.
இனிமேல் கூடவே ஒரு
முத்தமும் வைத்துவிட்டு போ..
மூர்ச்சையாகி கிடக்கட்டும்.
***************************************
அது எப்படி..
நீ ஏறிய பின்பு
பேருந்து
பேரழகுந்தாகிறது.
*****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

மடி சாயும் வரம்..

உன் கைவளைகள் சொல்லவில்லையா
மனதோடு என் பெயரை..
தினம் கண்மூடும் நேரங்கள் சொல்லவில்லையா
கனவோடு என் நேசங்களை..
அஞ்சாறு நிலவுகள் சேர்த்தே அழகாக செய்தானம்மா
ஒரு நூறு மீனாட்சி பார்க்கின்றேன் உன் முகத்தில்.
நீ பொட்டு வைக்கும்போதெல்லாம்
சொல்லியிருக்குமே உன் வீட்டு கண்ணாடி
அது பொட்டல்ல என் உயிரென்று..
அள்ளி பூச்சூடும் போதெல்லாம்
சொல்லியிருக்குமே அதன் வாசங்கள்..
அது வாசமல்ல என் நேசம் என்று..
தங்க மீன் செய்து வளர்த்தாலும்
அது மிரட்டும் முட்ட கண்ணை போலாகுமா?
வெள்ளி மலரொன்றை பரிசாக பெற்றாலும்
அது ரசிக்கும் உன் புன்னகை போலாகுமா?
வரங்கள் அள்ளி கொடுத்தாலும் வேண்டாமேன்பேன்
உன் மடி சாயும் நிமிடங்கள் போதுமேன்பேன்.
**********************************************
ப்ரியமுடன்
லோகநாதன்.

Feb 16, 2011

நினைவெனும் மந்திரங்கள்.

நட்போ.. காதலோ..
பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
.
வேரூன்றாமல் வளர்ந்து
நீரூற்றாமல் பூக்கும்
பூக்களவை.
.
சமயங்களில்
உற்சாக பேரூற்றாய்
உயிரோடு பொங்கும்.
சந்தர்ப்பங்களில்
கொடிய விஷமாய்
மனதோடு ஏங்கும்.
.
வேண்டாம் என்று
தள்ளி வைத்தாலும்
சுயங்கள் திருடும் கலையை
இயல்பாய் கற்று வைத்திருக்கின்றன.
.
எதிர்வரும் இயல்பான
முகத்திலோ அல்லது
எதிர்பாரா ஒரு சில
செயல்களிலோ சட்டென்று
ஒட்டிக்கொ(ல்)ள்ளும்.
.
நட்போ.. காதலோ..
பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
நினைவென்னும் மந்திரங்களை.
*******************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

மனமுதிரும் காலம்.

கொஞ்சம் கூட
உறுத்தவே இல்லை.
இலையுதிர்கால மரங்கள்.
.
.
துணை.
***********************************************
பூஜைக்கு போவேனா மாட்டேனா
கேட்டுவிட்டு பூப்பதில்லை.
.
.
கல்லறை பூக்கள்.
**************************************
ரசிக்க எத்தனையோ உள்ளன.
ரசிக்கும் மனம்தான் கேள்வியாகிறது.
.
.
பிரிவுகள்.
******************************
பறக்க ஆசைப்படும்
சிறகொடிந்த பறவையை போல்
தடுமாறுகின்றன
நமக்கான நேரங்கள்.
.
.
மனசின் வார்த்தைகளின்மை.
********************************
எப்போதும் வெறுப்புகளை
உமிழ்ந்தாலும்
தேவதையாக வாழ
தெரிந்திருக்கிறது.
.
.
காதலி.
**************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 13, 2011

பொருளற்ற கவிதைகள்..

என்னதான் அழகாய் இருந்தாலும்
ரசிக்கப்படாமல்
கிழித்தோ அல்லது கசக்கியோ
எறியப்படும் யாரோ ஒருவரால்..
பொருளற்ற கவிதைகள்.
ம்ம்.. கவிதையும் காதலும் வேறல்ல.
***************************************
கொஞ்சி கொஞ்சி
கரைதிருக்கலாம்தன்..
வெட்கம் என்றால்..
வெறுப்புகளை என்ன செய்ய?
**********************************
நீரை சுமக்கும் மேகங்கள்
பாரத்தை அவ்வப்போது
இறக்கி வைத்து கொள்கின்றன
மழையாய்..
உன் நினைவை சுமக்கும்
இதயம் என்ன செய்யும்..
கண்ணீரும் இல்லை என்னிடம்.
************************************
உன் வருகைகளுக்கான
அதீத எதிர்பார்புகள் இல்லாத நான்..
உன் வார்த்தைகளுக்கான
மயக்கம் இல்லாத நான்..
உன் சந்தோஷங்களுக்கான
தேடல் இல்லாத நான்..
நூலறுந்த பட்டத்தை
உற்று கவனிக்க தோன்றுகிறது எனக்கு .
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.