May 26, 2009

அன்புள்ள செல்லம்மாவுக்கு..


அன்புள்ள செல்லம்மாவுக்கு,
கவிதை நீ..
காகிதம் நான்..
நீ மட்டுமே நிரம்பியிருக்க
வேண்டிய என் பக்கங்களில்
இன்று என் கண்ணீர்த்துளிகள் மட்டுமே..


சோலை நான்..
சுகந்தம் நீ..
நீ மட்டுமே நிரம்பியிருக்க
வேண்டிய என் வெளியெங்கும்..
வெம்மையாய் என் ஏக்கங்கள் மட்டுமே..


உன் பிம்பம்
உன் புன்னகை..
உன் கொஞ்சல்..
உன் மிஞ்சல்..
எனக்கான உன் நேரங்கள்..
எல்லாவற்றையும் சேர்த்துவைக்கும்
ஒரு அற்புதமாய் இருந்தது
என் இதயம்..
எல்லாவற்றையும் ஒரே வார்த்தையால்
மீட்க முடியாமல் சிதறடிக்க முடிந்தது
உன்னால் மட்டும்?

தினம் காலை வந்து
மாலை மறைய
என் உலகின் சூரியனல்ல நீ ..
என் வானம்..
நொடிப்பொழுதும் மறையாமல்
என்னுடனே இருக்கணும் நீ..
இப்போதும் இருக்கிறாய்..
நிஜங்களாக அல்ல..
நினைவுகளாக..
அதற்காக உன் நிஜங்களை
திருடிக்கொள்ள விருப்பமில்லை எனக்கு..
ஆம் பெண்ணே..
கரைவது என் வாழ்க்கையானாலும்..
நிறைவது உன் மனமாக இருக்க வேண்டும்.
- இப்படிக்கு..
மறுபடியும்
கனவுகளை
தொலைத்தவன்.
.....................................................................................



May 19, 2009

முத்தவியல்..

"டேய்.. "
"........................."
"டேய்.. உன்னத்தான்டா.."
"ம்ம்.. என்ன..?"
"என்ன அய்யா வந்ததுலேர்ந்து
ஒண்ணுமே பேசல?"
"ஒண்ணுமில்ல..
ஒரு யோசனைல இருந்தேன்.."
"என்னிடம் கூட பேசாமல்
அப்டி என்ன யோசனை உனக்கு?"
"அதான் யோசனையே..
உன்னிடம் பேசாமலேயே
உன்னிடம் முத்தம் வாங்க வேண்டும்..
எப்டீன்னு யோசித்து பார்த்தேன்.."
"அதானே பார்த்தேன்..
நீ திருந்தவே மாட்டியாடா.."
"சரி..சரி.. ஒரு சின்ன்ன்ன முத்தம் கொடு..
ஒரு ரெண்டு நிமிசத்துக்கு திருந்திகறேன்.."
"ஏய்.. கொன்னுடுவேன்.. வேற பேசு.."
"செல்லம்மா.."
"என்ன சொல்லு.."
"அள்ளஅள்ள குறையாதுன்னு
சொல்லுவாங்களே என்ன அது?"
"அது அட்சய பாத்திரம்டா.."
"அத பாத்திருக்கியா?"
"இல்ல.. கேள்விப்பட்டதோட சரி.."
"சரி.. கொள்ள கொள்ள நிறையாததுனு
கேள்விப்பட்டிருக்கியா ?"
"இல்லையே.. என்ன அது?"
"அது என்னன்னெல்லாம் சொல்லமுடியாது..
ஆனா அது என்னிடமே இருக்கு.."
"என்னடா அது?"
"அதான் சொல்றேன்ல சொல்லமுடியாதுன்னு..
வேணும்னா நீ டெஸ்ட் பண்ணி பாரு.."
"நானா.. எப்படீடா.."
"அப்படி கேளு..
இப்போ நீ எனக்கு முத்தம்
தந்துட்டே இரு ..
என் காதல் நிறையுதான்னு பார்ப்போம்.."
"நான் அப்பவே நெனச்சேண்டா..
நீ இங்கதான் வந்து நிப்பேன்னு..
இதுக்கு மேல பேசாதே நீ.."
"....................."
"....................."
"......................................... . . . ."
"டேய்.."
"ம்ம்.."
"உனக்கு என் முத்தம்ன அவ்ளோ இஷ்டமா?"
"ம்ம்.. நீ முத்தங்களாக வெறும்
சத்தங்களை மட்டும் தருவதில்லையே..
உன் காதலையும் சேர்த்தல்லவா தருகிறாய்.."
"ம்ம்.. எதாச்சும் ஒன்னு சொல்லிடுவியே..
சரி உனக்காக ஒன்னே ஒன்னு தரேன்.."
.
.
.
.
.
.
"அம்மாடீ.. ஒன்னே ஒண்ணுனு சொன்ன..
இப்போ கூடை நிறைய தந்துட்ட.."
"ம்ம்..பரவால்ல.. வச்சுக்க.."
"ம்ஹூம்.. எனக்கு இப்போதைக்கு
ஒன்னு போதும்..
மீதியை உனக்கே திருப்பி தரேன்..
எங்கே உன் கன்னம்.. கழுத்து.. மா.."
"ஷ்.. சொல்லாதே.. செய்.."
ஹய்யோ.. என்னதான் தினமும் கொடுத்தாலும்
உன் காதல் குறைவதுமில்லை..
என் மனம் நிறைவதுமில்லை..
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்..

May 9, 2009

காதல் சாபம்.

என்னதான் கெஞ்சி
கேட்டாலும்
என் பக்கமே வருவதில்லை நீ ..
எந்த சிறையில்
அடைத்தாலும் என்னை தேடியே
உன் ப்ரியங்கள்..
...................................
தவமின்றி கிடைத்த
வரங்கள் உன் ப்ரியங்கள்..
அதனால்தான் அவற்றை
தொலைக்க நான்
கடும் தவம் செய்ய
வேண்டியிருக்கிறது.
.............................................
ஒரு மழை நாளில்
நீ கைநீட்டி விளையாடும்
உன் வீட்டு சாளரத்திலிருந்து
ஒழுகும் மழைத்துளியாக
மாறவேண்டும் அல்லது
எதேச்சையாக நீ
தெருவில் நடக்க
எதேச்சையாக வரும்
மழையில் உன் மீது
விழும் மழை துளியில்
முதல் துளியாக இருக்க
வேண்டும் என்றேன்.
இப்போதெல்லாம் உன்
உலகில் மழையே வருவதில்லை
என்கிறாய் என்னிடம்.
.............................................
வசந்தம் வீசும்
அதிகாலையில்..
சுகந்தம் பாடும்
அந்தி மாலையில்..
அமைதியான
ஒரு பௌர்ணமி இரவில்....
ஆர்ப்பாட்டமான
ஒரு மழைநாளில்..
என் இதயத்தில்
கொட்டிகிடக்கும் காதலெல்லாம்
உனக்கானதுதான் என
எப்படியாவது உனக்கு
உணர்த்த ஆசைதான் எனக்கு..
நமக்கான அந்த நாட்கள்
இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்.
........................................................
உன்னை விட்டு
விலக ஆரம்பித்த
அந்த நாளிலிருந்தே
என் வீட்டு பூனைக்குட்டி
உட்பட என் எல்லாமே
என்னை விட்டு விலக
ஆரம்பித்து விட்டன..
ஏன் இப்படி என்னை
தனிமரமாக்குகிறாய்..
................................................
நீ காதலை உணரும்
நாட்களில் ஒரு
கருங்கல்லைதான்
காதலித்துக்கொண்டிருப்பாய்
காதல் கடவுள்
சாபங்கள் தந்துவிட்டானோ
எனக்கு..
இன்னமும் உன்னையே
காதலித்துகொண்டிருக்கிறேன்.
....................................................