மருண்ட விழிகளுடன்
துள்ளிச்சென்ற
பூனைக்குட்டியை
பார்த்தவாறே சொன்னாய்
‘எனக்கு பூனைன்னா
ரொம்ப பிடிக்கும்..!’
மறுகணமே முடிவு
செய்துகொண்டேன்
அடுத்த ஜென்மத்தில்
பிறந்தால் பூனையாக
பிறக்க வேண்டுமென்று.
பிரிதொருமழைநாளில்
தூறலாய் நனைந்திருந்த
பூக்களைப் பார்த்தவாறே
ரசித்து சொன்னாய்..
’எவ்வளவு அழகு..
ஒவ்வொன்னும் ஒரு வரம்..!
ரொம்ப பிடிச்சிருக்கு!’
ரசித்தவாறே
நினைத்துக்கொண்டேன்
இனம் இனத்தோடுதான்
சேருமென்று.
இன்னுமொரு அழகான
முன்னிரவுப்பொழுதில்
நட்சத்திரமாய் ஜொலிக்கும்
வானைப்பார்த்துக்கொண்டே
சொன்னாய்..
’ஹய்யோ நிலா..
கொட்டிக்கொடுத்தாலும்
காணக்கிடைக்காத அழகுடா..!
ரொம்ம்ப பிடிச்சிருக்கு..”
சட்டென்று ஏங்கி
தொலைத்தது மனசு
’என்னைப்பிடிக்குமென்று
ஒருநாளேனும்
சொல்லமாட்டாயா?’ என்று.
எப்படிப்படித்தாயோ மனதை..
மறுகணமே சொன்னாய்.
‘சொல்லித்தான்
தெரியனுமா உனக்கு?
உன்னை பிடிக்காத நாளொன்று
என் வாழ்வில் இல்லையடா..
மறைந்தாலும் உன் வாசல் மண்மீது
பூப்பூவாய் பூத்துக்கொண்டே
இருப்பேன்.. உன்னை ரசிக்க..!’
அன்றிலிருந்து எனக்கும் பிடித்தது
ஒரு மகாகிறுக்கு.
உனக்கு பிடிக்காததும் சேர்த்து
எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.
********************
ப்ரியமுடன்..
லோகநாதன்.