Nov 19, 2010

வசிய பிசாசு.

இப்பொழுதெல்லாம் என் காதலோடு
என் பொழுதுகளும் என்னை
கெஞ்ச ஆரம்பித்து விட்டன.
எப்பொழுதும் உன்னுடனே இருக்க சொல்லி..
சரியான வசிய பிசாசுடீ நீ.
********************************************
வேணாம்..வேணாமென
வாங்க நினைக்கிறாய்..
வேணும்..வேணுமென்றால்
தர மறுக்கிறாய்..
ஏனடி முத்தங்களில் மட்டும் இப்படி
முரண்பட்டு மூச்சடைக்க வைக்கிறாய்?
********************************************
கடந்து செல்லும் ஐஸ்கிரீம் வண்டியின்
மணிச்சத்தத்தை கேட்டுகொண்டே
பின்னோக்கி செல்லும் சிறுவனின்
மனதைபோல்தான்..
கடந்து செல்லும் உன்
முந்தானை வாசத்தை பற்றிக்கொண்டு
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனசும்.
***********************************
தேவதைகள் ஊஞ்சலாடுவதை
பார்க்க ரொம்ப அழகாக இருக்குமாம்..
ஒருமுறை எனக்கு ஊஞ்சலாடி
கட்டுகிறாயாடீ செல்லம்.
************************************
கைகளில் மருதாணி வைத்திருக்கிறாயே
சேலை நான் கட்டி விடட்டுமா என
கேட்டதற்கு ஏனடி இப்படி முழிக்கிறாய்?
இன்னும் போக போக என்னவெல்லாமோ
கேட்பேனே அப்போது என்ன செய்வாய்?
*******************************************

எதுவுமே கொடுக்க கொடுக்க

குறைந்துகொண்டேதான் வரும்.

நம் காதலில் முத்தங்கள் மட்டும்

அதிகரித்துக்கொண்டே வருகின்றனவே.

********************************************

ப்ரியமுடன்..
லோகநாதன்.

Nov 9, 2010

பிரியங்களை என்ன செய்ய?



மிக அழகாய் பிறந்திருந்தும்
தனிமையில் தேயும் நிலவை போல்தான்
அநாதையாய் கிடக்கின்றன..
உன்னால் களைந்தெறியப்பட்ட
என் ப்ரியங்கள்.

எட்ட முடியா ஏகாந்தமென
தெரிந்திருந்தும்
'தேவதைகளின் தேவதை' என
செல்லம் கொஞ்சிய அரளிபூக்கள் அவை.

வார்த்தைகள் இல்லா
பயணத்தில் உன் நினைவுகளாய்
உருமாறி கொல்லும்
வன்கவிதைகள் அவை..

தூக்கமில்லா பின்னிரவுகளின் நீட்சியில்
முட்களாய் மாறி இதயத்தை வலிக்க செய்து
ரசித்து விழுங்கும் கொடுந்தீ ..

ஆனாலும் வார்த்தைகளால்
அவ்வப்போது காயங்கள் செய்ய
மட்டுமே முடிகிறது உன்னால்..
அவற்றை கொலை செய்ய
உனக்கும் தெரியவில்லை..
அவற்றுக்கும் தற்கொலை
செய்துகொள்ள தெரியவில்லை..

என்ன செய்ய நான்?
..............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.