Sep 29, 2009

கண்மணிக்கு..

கவிதையாய்
என் நெஞ்சில்
வாசம் செய்கிறாய்..
ஆனால் நான்
ரசனைகள்
தொலைத்து நாட்கள்
மாதங்களாகி விட்டன.
..........................................
நாட்கள் மாதங்களாகலாம்..
மாதங்கள் வருடங்களாகலாம்..
அதனால் என்ன..
என் காதல்
குறைந்துவிடவா போகிறது..
காதலுக்கேது காலமும்.. நேரமும்..
....................................................
காலமும் நேரமும்
காத்திருக்க போவதில்லை
உனக்காக..
உனக்கான சொந்தங்கள்கூட
உனக்காய் கடைசீ வரை
காத்திருப்பதென்பது
இயல்புகள் மீறிய ஒன்றுதான்..
என் காதல் காத்திருக்க
ஆசைப்படுகிறது..
என் கல்லறைமீது
பூக்களாய் பூத்தேனும்.
...............................................
கல்லறை மீது
பூத்ததை தவிர
வேறென்ன பாவம் செய்தன
கல்லறை பூக்கள்..
கூந்தல் ஏறவும் முடியவில்லை..
பூஜைக்கு போகவும் முடிவதில்லை..
அப்படியே சில இதயங்களும்..
நேசம் வைத்த
பாவத்தை தவிர
வேறெந்த பாவமும்
அறியவில்லை என்றாலும்..
வாழவும் முடிவதில்லை..
சாகவும் முடிவதில்லை.
....................................................................

Sep 7, 2009

என் காதல்..

நட்சத்திரங்களுடன்
கைகோர்த்து
முப்பத்து முக்கோடி
தேவர்கள் அண்ட் தேவதைகள்
சுகந்தம் பாட..
நகரும் நிமிடங்களோடு
கைகோர்த்து
பூக்களும் தோரணங்களும்
கவிதை பாட..
இதழ் நிறைய புன்னகை
சிந்தும் உறவுகளும்..
மனம் நிறைய வாழ்த்துகள்
சொல்லும் உள்ளங்களும்
நிறைந்திருக்க..
உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..

இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்..
கனவில் தினமும்
நினைத்து தொலைக்கிறது.
என் காதல்.
.................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.