Oct 31, 2009

கண்ணாடி ஜன்னல் நீ..

மழையோடு மகிழ்ந்தாடி
மனதோடு கலந்திருக்கும்
மண்வாசம் போல..
என் மனதோடு உறவாடி
உயிரெங்கும் நிறைந்திருக்கும்
சுவாசங்கள் நீயடி.
........................................................
எப்படியும் கொஞ்ச
நேரம்தான் எனும்
உண்மை அறியாமல்
பேருந்து பயணத்தில்
ஜன்னலோர இருக்கை
கிடைத்துவிட்ட
குழந்தையின் குதூகலங்கள்..
உனக்கும் எனக்குமான
நேரங்களில்.
.........................................
உனக்கென
காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்..
எனக்காகவே
வருகிறாய்
ஒவ்வொரு நாளும்..
நமக்கான காதல் மட்டும்
ஏனோ கண்ணாமூச்சியாய்.
..................................................
மழைத்துளிகளின்
நடுவே கண்ணீராய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான்..
உன்னை காதலென்று
நினைத்திருந்தால்
கரைந்து போயிருப்பாய்..
உயிரென்று நினைத்திருந்தால்
மறைந்து போயிருப்பேன்..
நீ கரையவுமில்லை..
நான் மறையவுமில்லை.
.................................................
தொட்டவுடன்
உடைந்து விடும்
கண்ணாடி ஜன்னல்தான் நீ..
அதற்காக என்
காதலையுமா
தாங்க முடியவில்லை உன்னால்?
...........................................
சுகந்தமாய் வாழ்ந்து
பார்க்கிறேன்
உன் நினைவுகளோடு..
உதிர்ந்த மலரின்
கலையாத வாசங்களாய்..
நிறைந்த மனதில்
புரியாத ஏக்கங்கள்.
......................................